அமெரிக்காவால் அண்மையில் விதிக்கப்பட்ட சுங்கவரி காரணமாக, நமது நாட்டின் ஏற்றுமதித் துறைக்கு ஏற்படக்கூடிய தாக்கத்தை மதிப்பிடுவதற்கும், அத்தாக்கத்தை குறைப்பதற்கும், இலங்கை அரசாங்கம் மற்றும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்கள் மேற்கொண்ட உடனடி நடவடிக்கைகள் குறித்து, ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றம் தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளது.
அமெரிக்காவால் இந்த வரிக் கட்டணங்கள் விதிக்கப்பட்டதிலிருந்து, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்கள் இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அரசாங்கத்திற்கு தலைமை தாங்கியுள்ளதுடன், அமெரிக்க வணிக பிரதிநிதிகளுடன் கலந்தாலோசித்து, இலங்கை அரசால் வழங்கப்படக்கூடிய சலுகைகள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்க்கு உத்தியோகபூர்வமாக தகவல் அளிக்கும் வகையில் நடவடிக்கை எடுத்து, ஏற்றுமதித் துறையை பாதுகாப்பதற்கான தீவிரமான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. இதனை ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றம் தனது அறிக்கையில் பாராட்டியுள்ளது. இந்த துரித நடவடிக்கைகளின் விளைவாக, அமெரிக்காவால் அண்மையில் விதிக்கப்பட்ட வரிக் கட்டணங்கள் 90 நாட்களுக்கு நிறுத்திவைக்கப்படும் நாடுகளின் பட்டியலில் இலங்கையும் சேர்க்கப்படும் எனவும், இந்த முடிவு ஏற்றுமதித் துறையின் நிலைத்தன்மைக்கும் நம்பகத்தன்மைக்கும் வழிவகுக்கும் எனவும் ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றம் வலியுறுத்தியுள்ளது.
அரசாங்கம் மேற்கொண்ட இந்த அவசர மற்றும் விரைவான நடவடிக்கைகளின் மூலம், இலங்கையின் ஏற்றுமதித் துறையின் லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தையும், இத்துறையின் நிலைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையையும் பாதுகாக்கும் அரசாங்கத்தின் அளவிட முடியாத அர்ப்பணிப்பு வலுவாக பிரதிபலிக்கப்படுகிறது.
தற்போதைய 90 நாள் வரிக் கட்டண இடைநிறுத்தத்திற்குப் பிறகு எடுக்கக்கூடிய நிலையான நடவடிக்கைகள் குறித்து அமெரிக்க அரசாங்கத்துடன் பரஸ்பர நன்மை பயக்கும் நீண்டகால வர்த்தக ஒப்பந்தத்தை நோக்கி நகர அரசாங்கம் எடுத்த விரைவான நடவடிக்கைகளைத் தொடர்வது முக்கியம் என்பதை ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றம் வலியுறுத்துகிறது.