“இலங்கையின் இளம் வீரர்களை பட்டை தீட்ட எல்பிஎல் ஒரு சிறந்த தளம்” – அஞ்சலோ மெதிவ்ஸ்

Share

Share

Share

Share

இலங்கை கிரிக்கெட்டின் அடுத்த தலைமுறை வீரர்களை உருவாக்குவதில் லங்கா பிறீமியர் லீக் (எல்பிஎல்) தொடர் ஒரு முக்கிய தளமாக விளங்குவதாக இலங்கை அணியின் சிரேஷ்ட வீரர் அஞ்சலோ மெதிவ்ஸ் தெரிவித்துள்ளார். உலகின் முன்னணி சர்வதேச வீரர்களுடன் இணைந்து விளையாடும் அரிய வாய்ப்பை இந்தத் தொடர் இளம் உள்ளூர் வீரர்களுக்கு வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் தொடரின் முக்கியத்துவம் குறித்துப் பேசிய மெதிவ்ஸ், இளம் இலங்கை வீரர்களை உயர்தரப் போட்டிச் சூழலுக்கு கொண்டு செல்வதில் எல்பிஎல் முக்கிய பங்கு வகிக்கிறது என்றார். அனுபவம் வாய்ந்த சர்வதேச வீரர்கள் போட்டிகளுக்கு எவ்வாறு தயாராகிறார்கள், அழுத்தங்களை எவ்வாறு கையாளுகிறார்கள் மற்றும் முக்கியமான தருணங்களில் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள இது உதவுகிறது என்றும் அவர் கூறினார்.

‘லங்கா பிறீமியர் லீக் தொடரானது இளம் வீரர்களுக்கு சிறந்த அனுபவத்தையும், வாய்ப்புகளையும் வழங்குவதால், இது இலங்கை கிரிக்கெட்டிற்கு மிகவும் முக்கியமானதாகும். அவர்கள் உலகின் முன்னணி சர்வதேச வீரர்களுடன் இணைந்து செயல்படவும், ஒரே ஆடை மாற்றும் அறையைப் பகிர்ந்துகொள்ளவும் வாய்ப்புப் பெறுகின்றனர். இதன் மூலம், சர்வதேச வீரர்கள் பல்வேறு சூழ்நிலைகளை எப்படிக் கையாளுகிறார்கள், அழுத்தங்களை எவ்வாறு உள்வாங்கிக் கொள்கிறார்கள் மற்றும் போட்டிகளுக்கு எவ்வாறு தயாராகிறார்கள் என்பதை அவர்களால் கற்றுக்கொள்ள முடிகிறது’ என்று மெதிவ்ஸ் கூறினார். ‘இது இளம் வீரர்களை பட்டை தீட்டுவதைப் பற்றியதாகும்;. எங்களது அனுபவங்களை அவர்களுடன் பகிர்ந்துகொள்வது எங்களது கடமையாகும்.’ என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

உலகின் முன்னணி லீக் போட்டிகளில் விளையாடிய கிரிக்கெட் வீரர்களுடன் இணைந்து, போட்டித்தன்மை வாய்ந்த டி20 சூழலில் விளையாடுவது உள்ளூர் வீரர்களுக்கு ஒரு பெரிய சாதகத்தை ஏற்படுத்துகிறது என்று மெதிவஸ் சுட்டிக்காட்டினார். அத்துடன், மிக உயர்ந்த மட்டத்திலான கிரிக்கெட் போட்டிகளுக்குத் தேவையான தொழில்முறைத் தகுதி (professionalism), தயாரிப்பு மற்றும் மூலோபாய விழிப்புணர்வு ஆகியவற்றை இலங்கை வீரர்கள் நேரடியாக அவதானிக்க இத்தொடர் அனுமதிக்கிறது என்றும் அவர் கூறினார்.

‘சர்வதேச அளவில் சிறந்த வீரர்கள் போட்டிக்காக எவ்வாறு தயாராகிறார்கள், அழுத்தங்களை எப்படிக் கையாளுகிறார்கள் என்பதை நேரில் பார்க்க முடியும். இளம் வீரர்கள் அவர்களிடம் கேள்விகளைக் கேட்கலாம்; அதேநேரம், அனைவரும் தங்களது அறிவு, விவேகம் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளத் தயாராகவே இருக்கிறார்கள். இது இளைய தலைமுறைக்குக் கிடைக்கும் ஒரு அருமையான வாய்ப்பு.’ என்று அவர் குறிப்பிட்டார்.

இலங்கை வீரர்கள் நீண்ட காலத்திற்கு இத்தொடரின் மூலம் பயனடைய வேண்டுமானால், எல்பிஎல் தொடரானது ஒவ்வொரு வருடமும் தொடர்ச்சியாக நடத்தப்படுவதை உறுதி செய்வது அவசியம் என்றும் மெதிவ்ஸ் வலியுறுத்தினார். துடுப்பாட்ட வீரர்கள் நம்பமுடியாத துடுப்பாட்ட பிரயோகங்களை விளையாடுகிறார்கள், பந்துவீச்சாளர்கள் வெவ்வேறுறு சூழ்நிலைகளிலும் கள நிலவரங்களிலும் எவ்வாறு பதிலடி கொடுப்பது என்பதைக் கற்றுக்கொள்கிறார்கள். முக்கியமாக, இந்தத் தொடர் தொடர்ந்து நீடிக்க வேண்டும், ஏனெனில் இது வீரர்கள் எதிர்காலத்தில் முன்னேறிச் செல்ல உதவும். உலகளவில் பிரான்சைஸ் கிரிக்கெட் தொடர்ந்து பரிணமித்து வருவதால், நவீன டி20 கிரிக்கெட்டின் வேகம், தீவிரம் மற்றும் புத்தாக்கங்களுக்கு இலங்கை வீரர்கள் தொடர்ந்து முகங்கொடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

உலகெங்கிலும் டி20 கிரிக்கெட் அடைந்து வரும் பரிணாம வளர்ச்சியைப் பிரதிபலிக்கும் வகையில், எல்பிஎல் தொடரும் ஒவ்வொரு அத்தியாயத்திலும் முன்னேற்றம் கண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார். துடுப்பாட்டம், பந்துவீச்சு, களத்தடுப்பு என அனைத்துத் துறைகளிலும் ஆட்டம் வேகமெடுத்துள்ளதோடு, வீரர்கள் புதிய திறன்கள், பந்துவீச்சு முறைகள் மற்றும் உடல் தகுதித் தரங்களை தொடர்ந்து வளர்த்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கையில் திறமைகளுக்குப் பற்றாக்குறை இல்லை என்று குறிப்பிட்ட மெதிவ்ஸ், இளம் வீரர்களுக்கு உயர் மட்டத்தில் போட்டியிடுவதற்கான தொடர்ச்சியான வாய்ப்புகளே தேவை என்றார். ‘இலங்கையில் திறமைக்கும் எந்தக் குறையும் இல்லை. வீரர்களுக்குத் தேவைப்படுவது மிக உயர்ந்த மட்டத்தில் விளையாடுவதற்கான வாய்ப்புகள் மட்டுமே. உலகின் சிறந்த வீரர்களுக்கு எதிராக விளையாடுவதற்கான அந்த வாய்ப்பை எல்பிஎல் வழங்குகிறது.’ என்றார்.

வீரர்களின் வளர்ச்சியைத் தாண்டி, இந்தத் தொடரின் பரந்த தேசிய முக்கியத்துவத்தையும் அவர் எடுத்துரைத்தார். எல்பிஎல் தொடரானது இலங்கையின் அனைத்துப் பகுதிகளுக்கும் கிரிக்கெட்டைக் கொண்டு சேர்க்க உதவுவதுடன், இளம் ரசிகர்களை இந்த விளையாட்டை நோக்கி ஈர்க்கும் என்றும் அவர் நம்புகிறார்.

‘இந்த அழகான விளையாட்டை இலங்கையின் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என அனைத்துப் பகுதிகளுக்கும் நாம் கொண்டு செல்ல வேண்டும். எல்பிஎல் இளம் தலைமுறையினரிடையே ஆர்வத்தைத் தூண்டி, அதிகப்படியானோரை கிரிக்கெட் விளையாட ஊக்குவிக்கும். மேலும் ரசிகர்களை மைதானங்களுக்கும் தொலைக்காட்சிகளுக்கும் கொண்டு வரும். இது ஒரு புதிய அனுபவமாக அமைவதோடு, ரசிகர்களைத் தொடர்ந்து உற்சாகமாக வைத்திருக்கும்,’ என்றார்.

சர்வதேச வீரர்களை ஈர்ப்பதன் மூலமும், விளையாட்டு பொழுதுபோக்குத் துறையை வலுப்படுத்துவதன் மூலமும், கிரிக்கெட்டைச் சுற்றியுள்ள வணிக நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதன் மூலமும் இந்தத் தொடர் இலங்கைக்குப் பரந்த பொருளாதார மதிப்பைக் கொண்டுவருகிறது என்றும் அஞ்சலோ மெதிவ்ஸ் கூறினார்.

Five Sri Lankan Artists Unite...
Colombo Dockyard marks 52 years...
City of Dreams Sri Lanka...
Sri Lanka to Host Leading...
ஆரம்பகால குழந்தைப் பருவ வளர்ச்சியை வலுப்படுத்தும்...
City of Dreams Celebrates One...
Huawei’s Advanced Antenna Technology Delivers...
Prime Group Brings Real Estate...
City of Dreams Celebrates One...
Huawei’s Advanced Antenna Technology Delivers...
Prime Group Brings Real Estate...
Atlas PlayPalz joins national ECD...