லங்கா பிறீமியர் லீக் தொடரின் 6ஆவது அத்தியாயத்திற்கு முன்னதாக, எஸ்சி ஜப்னா கிங்ஸ் அணி, அனுபவம் வாய்ந்த இலங்கை வீரர்கள், சர்வதேச நட்சத்திரங்கள் மற்றும் ஐசிசி இன் இணை அங்கத்துவ நாடுகளின் திறமையான வீரர்கள் என ஒரு பலம் வாய்ந்த, சமபலமிக்க அணியை களமிறக்கவுள்ளது.
இம்முறை அணியின் ‘உள்நாட்டு ஐகொன்’ (Local Icon) வீரராக அதிரடி இடதுகை துடுப்பாட்ட வீரர் பானுக ராஜபக்ஷ இணைந்துள்ளார். இக்கட்டான சூழ்நிலைகளிலும் டி20 போட்டிகளின் போக்கை மாற்றியமைக்கக்கூடிய அவரது அனுபவம், அணியின் துடுப்பாட்ட வரிசைக்கு பெரும் பலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, அணியின் ‘வெளிநாட்டு ஐகொன்’ (OverSeas Icon) வீரராக பங்களாதேஷ் அணியின் நட்சத்திர சகலதுறை வீரர் சகிப் அல் ஹசன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சர்வதேச மற்றும் பல்வேறு லீக் போட்டிகளில் விளையாடிய அவரது பரந்த அனுபவம், பந்துவீச்சு மற்றும் துடுப்பாட்டம் ஆகிய இரு துறைகளிலும் அணிக்கு கூடுதல் சமநிலையை வழங்குவதோடு, தந்திரோபாய ரீதியாகவும் வழிநடத்த உதவும்.
மேலும், ஜப்னா அணியின் ‘உள்நாட்டு நட்சத்திர வீரராக இளம் சகலதுறை ஆட்டக்காரர் துனித் வெல்லாலகே தக்கவைக்கப்பட்டுள்ளார். அவரது இடதுகை சுழற்பந்து வீச்சும், துடுப்பாட்டத் திறனும் அணிக்கு முக்கிய பலமாகும். இவருடன் இணைந்து அணியின் வேகப்பந்து வீச்சை வலுப்படுத்த, வெளிநாட்டு நட்சத்திர வீரராக பங்களாதேஷின் தஸ்கின் அஹமட் இணைந்துள்ளார்.
முன்னணி வரிசை துடுப்பாட்டத்தை பலப்படுத்த ‘உள்நாட்டு பிளாட்டினம்’ வீரராக அவிஷ்க பெர்னாண்டோவும், இறுதி ஓவர்களில் அதிரடி காட்டக்கூடிய ‘வெளிநாட்டு பிளாட்டினம்’ வீரராக நமீபியாவின் டேவிட் வீசேயும் இணைந்துள்ளனர். அதேபோல, ஐசிசி இன் இணை அங்கத்துவ நாடுகளின் நட்சத்திர வீரராக நேபாளத்தின் திபேந்திர சிங் ஐரி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இவர்களுடன் நிஷான் மதுஷ்க, நுவனிந்து பெர்னாண்டோ, டில்ஷான் மதுசங்க, கமில் மிஷார மற்றும் சமிந்து விக்ரமசிங்க போன்ற திறமையான உள்நாட்டு வீரர்களும் இணைந்துள்ளதால், அணியின் துடுப்பாட்டம் மற்றும் வேகப்பந்து வீச்சுப் பிரிவு மேலும் பலமடைந்துள்ளது.
இது தொடர்பாக ஐபிஜி நிறுவனத்தின் ஸ்தாபகரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அனில் மோகன் கருத்துத் தெரிவிக்கையில், “ஜப்னா கிங்ஸ் அணியின் தரம், லங்கா பிரீமியர் லீக் தொடரானது ஒரு சர்வதேச தரத்திலான கிரிக்கெட் தளமாக வளர்ந்து வருவதை பிரதிபலிக்கிறது. அனுபவம் வாய்ந்த சர்வதேச வீரர்கள் மற்றும் திறமையான உள்நாட்டு வீரர்களின் இந்த கலவை, ரசிகர்களிடையேயும் வர்த்தக பங்காளிகளிடையேயும் பெரும் வரவேற்பைப் பெறும்.” என்றார்.
வலுவான துடுப்பாட்ட வரிசை, சிறந்த சகலதுறை ஆட்டக்காரர்கள் மற்றும் பலதரப்பட்ட பந்துவீச்சுத் தெரிவுகளுடன், வரவிருக்கும் லங்கா பிறீமியர் லீக் தொடரில் சம்பியன் பட்டத்தை வெல்லக்கூடிய முதன்மை அணிகளில் ஒன்றாக ஜப்னா கிங்ஸ் அணி கருதப்படுகிறது.




