கல்லோயா பிளான்டேஷன்ஸின் கதை என்பது வெறும் ஒரு தொழிற்சாலையை மீண்டும் தொடங்குவது பற்றியது மட்டுமல்ல — ஒரு தேசிய சொத்தின் மீதும், மக்களின் எதிர்காலத்தின் மீதும் நம்பிக்கை வைக்கும்போது, ஒழுங்குமுறையான ஒரு தனியார் நிறுவனத்தின் தொழில்முறைத்திறனால் என்ன செய்ய முடியும் என்பதற்கான சான்றாகும்.
சுமார் ஒரு தசாப்த காலமாக, அம்பாறையில் உள்ள ஹிங்குரான சீனி தொழிற்சாலை திறமையின் அடையாளமாக நின்றது. 1959இல் அரசு நிறுவனமாகத் ஆரம்பிக்கப்பட்டு, 1991இல் தனியாருக்கு மாற்றப்பட்ட இந்த ஆலை, போதிய முதலீடு இல்லாததால் நலிவடைந்து, 1997இல் அரசாங்கத்தால் மூடப்பட்டது. கல்லோயா பகுதியில் இந்த ஆலையையே தங்களின் ஒரே வாங்குபவராக நம்பியிருந்த ஆயிரக்கணக்கான கரும்பு விவசாயக் குடும்பங்களுக்கு, இந்த மூடல் அவர்களின் வாழ்வாதாரப் பாதிப்பாக அமைந்தது. விவசாய நிலங்கள் பாழடைந்தன; ஒரு தலைமுறை விவசாயிகள் பிழைப்பிற்காக நெல் விவசாயத்திற்கும், வேறு வேலைகளுக்கும் மாறினர்.

வெறும் மூலதனத்தை மட்டும் அடிப்படையாகக் கொள்ளாத ஒரு கூட்டு முயற்சி
2007 ஆம் ஆண்டில் இலங்கை அரசாங்கம் மற்றும் தனியார் நிறுவனங்களான பிரவுன் அண்ட் கம்பனி மற்றும் LOLC Holdings இடையே மேற்கொள்ளப்பட்ட பொது-தனியார் கூட்டு முயற்சியின் மூலமே கல்லோயா சீனி தொழிற்சாலை மீண்டும் இயக்கப்பட்டது. அரசாங்கம் 51% பங்குகளைத் தக்க வைத்துக் கொண்ட நிலையில், மீதமுள்ள 49% பங்குகளைப் பெற்ற தனியார் நிறுவனங்கள் அதனை இலாபகரமாக மாற்றும் செயல்பாட்டுப் பொறுப்பை ஏற்றன.
ஒரு தசாப்த காலமாக முடங்கிக் கிடந்த ஒரு தொழிற்சாலையை மீண்டும் இயக்குவதற்கு இயந்திரங்களைச் சரிசெய்வதை விட விவசாயிகளின் நம்பிக்கையை மீட்டெடுப்பதே மிகக் கடினமான பணியாக இருந்தது. அவர்களின் நம்பிக்கையை மீண்டும் பெற, தனியார் நிறுவனங்கள் தொடர்ந்து தொழில்நுட்ப வழிகாட்டுதல், தரமான விதைகள், உரங்கள் மற்றும் உறுதியான விலையை வழங்கி உதவினர்.
பிரவுன்ஸ் மற்றும் LOLC நிறுவனங்களின் பெருநிறுவன செயல்பாட்டு ஒழுங்குமுறை மற்றும் நிர்வகிப்பு தரங்கள், கல்லோயா திட்டத்தை நீண்ட காலம் நிலைத்து நிற்கும் ஒரு வெற்றிகரமான கூட்டு முயற்சியாக மாற்றியுள்ளன. முடங்கிக்கிடக்கும் அரசு சொத்துக்களை மீட்டெடுப்பதற்கான எதிர்கால பொது-தனியார் கூட்டு முயற்சிகளுக்கு இது ஒரு முன்மாதிரியாகக் கருதப்படுகிறது.
பாழடைந்த நிலையிலிருந்து ஒரு வழிகாட்டும் புள்ளி வரை
இருபது ஆண்டுகளுக்கும் மேலாக துருப்பிடித்துக் கிடந்த இயந்திரங்களுக்குப் பதிலாக நவீன கணினிமயமாக்கப்பட்ட செயலாக்க அமைப்புகள் பொருத்தப்பட்டு, கல்லோயா பிளான்டேஷன்ஸ் நிறுவனம் எத்தனால், மின் உற்பத்தி மற்றும் உரங்கள் தயாரிக்கும் பரந்த விவசாய-தொழில்துறை நிறுவனமாக வளர்ந்துள்ளது. இந்நிறுவனம் தற்போது சுமார் 8,500 ஹெக்டேயர் பரப்பளவில் பயிரிட்டு, நேரடியாக 1,300 பேருக்கும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதோடு, பிராந்தியத்தில் 30,000க்கும் மேற்பட்ட மக்களைச் சென்றடையும் வகையில் 8,000 விவசாயிகளுடன் கூட்டுப் பங்களிப்புடன் செயல்படுகிறது.
தொழிற்சாலையின் திறப்பு மட்டுமல்ல, ஒரு பகுதியின் மறுவாழ்வு
இந்த நிறுவனத்தின் முதலீடு அதன் எல்லைகளோடு மட்டும் நின்றுவிடாமல், நீர்ப்பாசனம், வடிகால் மற்றும் கிராமப்புற வீதிகள் அமைப்பது வரையிலும் நீண்டுள்ளது. மேலும், உள்ளூர் கோவில்கள், தேவாலயங்கள் மற்றும் மசூதிகளுக்கும் ஆதரவளிப்பதன் மூலம், இது வெறும் ஒரு தொழில்சார்ந்த தொடர்பு மட்டுமல்ல, மக்களுடனான நீண்டகால சமூக உறவு என்பதை உணர்த்துகிறது. தேசிய அளவில் பார்க்கும்போது, வலுவான உள்நாட்டு சர்க்கரைத் தொழில் இறக்குமதியைச் சார்ந்து இருப்பதைக் குறைக்கிறது. இதனால், நாட்டின் அந்நியச் செலாவணி சேமிக்கப்படுவதோடு, செலுத்து சமநிலையில் (Balance of Payments) ஏற்படும் சுமையையும் குறைக்கிறது.
இலங்கையில் பயன்பாடின்றி முடங்கிக்கிடக்கும் அரசு சொத்துக்களுக்குப் பற்றாக்குறை இல்லை. அரசாங்கம் பெரும்பான்மைப் பங்குகளையும் நீண்டகாலப் பொது நலனையும் தன்வசம் வைத்திருந்து, வெறும் பண முதலீட்டை மட்டும் தராமல், முறையான வழிமுறைகள், சட்ட ஒழுங்குமுறைகள் மற்றும் ஒவ்வொரு அறுவடையின் மூலமும் மக்களின் நம்பிக்கையைப் பொறுமையாக மீட்டெடுக்கும் ஒரு தனியார் பங்காளியைத் தேர்ந்தெடுத்தால், அந்தச் சொத்துக்களை இலாபகரமாக மீட்டெடுக்க முடியும் என்பதை கல்லோயா திட்டம் நிரூபித்துக் காட்டுகிறது. தொழிற்சாலையின் இயந்திரங்கள் முடங்கிப்போய் சுமார் இரு தசாப்தங்களுக்குப் பிறகு, வயல்வெளிகள் மீண்டும் பசுமையாக மாறியுள்ளன. ஒரு காலத்தில் கைவிடப்பட்ட இந்தச் சொத்து, இப்போது ஒரு நன்கு திட்டமிடப்பட்ட பொது-தனியார் கூட்டு முயற்சி எத்தகைய வெற்றியை அடைய முடியும் என்பதற்கான சிறந்த முன்மாதிரியாக மாறியுள்ளது.





