இலாப வரம்பு அழுத்தத்திற்கு மத்தியிலும் நுகர்வோர் விரிவாக்கம் மற்றும் பன்முகப்படுத்தப்பட்ட கோப்புறை (Portfolio) ஆகியவை வருவாய் வளர்ச்சிக்கு தொடர்ச்சியான ஒத்துழைப்பை வழங்கி வருகின்றன
பல்வேறு துறைகளில் கால்பதித்துள்ள இலங்கையின் முன்னணி கூட்டு நிறுவனமான சன்ஷைன் ஹோல்டிங்ஸ் பிஎல்சி (CSE: SUN), 2026/27 நிதியாண்டின் முதல் காலாண்டில் 18.5 பில்லியன் ரூபா ஒருங்கிணைந்த வருவாயை ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 16.6% வளர்ச்சியாகும்.
பன்முகப்படுத்தப்பட்ட வணிக முதலீடுகள் மற்றும் Joint Agri Products Ceylon (Pvt) Ltd (JAPC) நிறுவனத்தின் ஒருங்கிணைப்பு, ஆகியவை குழுமத்தின் மொத்த வருவாய் வளர்ச்சிக்கு ஒத்துழைத்தன. ஹெல்த்கெயார் துறை 49.2% பங்களிப்புடன் குழுமத்தின் மிகப்பெரிய துறையாக நீடிக்கிறது. இதனைத் தொடர்ந்து நுகர்வோர் துறை 35.6% பங்களிப்பையும், விவசாய வணிகம் 15.2% பங்களிப்பையும் வழங்கியுள்ளன. இருப்பினும், ஹெல்த்கெயார் துறையில் நிலவிய ஒழுங்குமுறை விலை நிர்ணய அழுத்தம், விநியோகத் சங்கிலி சவால்கள் மற்றும் விவசாய வணிகத்தில் ஏற்பட்ட அதிக செயல்பாட்டுச் செலவுகள் காரணமாக இலாபத்திறன் பாதிக்கப்பட்டது.
மொத்த இலாபம் கடந்த ஆண்டுடன் (YoY) ஒப்பிடுகையில் 3.2% அதிகரித்து 5.2 பில்லியன் ரூபாவாக உயர்வடைந்துள்ளது; அதே நேரத்தில் மொத்த இலாப வரம்பு 366 அடிப்படை புள்ளிகள் குறைந்து 28.1% ஆக வீழ்ச்சியடைந்தது. வட்டி மற்றும் வரிக்கு முன்னரான வருவாய் (EBIT) 7.8% குறைந்து 2.4 பில்லியன் ரூபாவாக உள்ளதுடன், அதன் இலாப வரம்பும் 13.2% ஆகக் குறைந்துள்ளது. இருப்பினும், வரிக்கு பின்னரான இலாபம் 6.0% அதிகரித்து 1.4 பில்லியன் ரூபாவை எட்டியுள்ளது.
இந்தச் செயல்பாடு குறித்து சன்ஷைன் ஹோல்டிங்ஸ் பிஎல்சி குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஷியாம் சதாசிவம் கூறுகையில், “முக்கிய துறைகளில் லாப வரம்பு அழுத்தங்கள் இருந்தபோதிலும், சன்ஷைன் ஹோல்டிங்ஸ் முதல் காலாண்டில் வலுவான வருவாய் வளர்ச்சியை ஈட்டியுள்ளது. இந்தச் செயல்பாடானது எங்களது பன்முகப்படுத்தப்பட்ட வணிக மாதிரியின் நெகிழ்வுத்தன்மையையும், JAPC நிறுவனத்தின் பங்களிப்பையும் பிரதிபலிக்கிறது. அதே நேரத்தில், ஹெல்த்கெயார் துறையில் நிலவிய ஒழுங்குமுறை விலை அழுத்தங்கள் மற்றும் விநியோகச் சங்கிலி சவால்கள், விவசாய வணிகத்தில் ஏற்பட்ட அதிக செயல்பாட்டுச் செலவுகளும் இலாபத்திறனைப் பாதித்துள்ளன” என தெரிவித்தார்.
சதாசிவம் அவர்கள் மேலும் கூறுகையில், “ஈட்டப்படும் வருவாயின் தரத்தைப் பாதுகாப்பது, உள்ளூர் உற்பத்தித் திறன்களை மேம்படுத்துவது மற்றும் ஒழுங்குபடுத்தப்பட்ட வளர்ச்சி வாய்ப்புகளைத் தொடர்வது என்பவை எமது முன்னுரிமை விடயங்களாக உள்ளன. Zydus Sunshine Lifesciences நிறுவனத்தின் ஸ்தாபிப்பானது, உள்நாட்டு மருந்து உற்பத்தியை வலுப்படுத்துவதிலும், இலங்கையின் சுகாதார விநியோகச் சங்கிலிக்குள் அதிக நெகிழ்வுத்தன்மையை உருவாக்குவதிலும் ஒரு முக்கியமான படியாகும். குழுமம் முழுவதும், நிலையான மற்றும் நீண்டகால மதிப்பை உருவாக்குவதற்காக எங்களது வர்த்தக நாமங்கள், திறன்கள் மற்றும் செயல்பாடுகளில் முதலீடு செய்வதை நாம் தொடர்ச்சியாக பின்பற்றவுள்ளதாக” தெரிவித்தார்.
இந்தக் காலாண்டில், சன்ஷைன் ஹெல்த்கெயார் லங்கா லிமிடெட் மற்றும் இந்தியாவில் உள்ள ஜைடஸ் லைஃப்சயின்சஸ் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து ‘ஜைடஸ் சன்ஷைன் லைஃப்சயின்சஸ் (பிரைவேட்) லிமிடெட்’ நிறுவனத்தை நிறுவியுள்ளன. இந்த கூட்டு முயற்சியானது, BOI ஹொரண ஏற்றுமதி செயலாக்க வலயத்தில் (Horana Export Processing Zone) ‘சிறந்த உற்பத்தி நடைமுறைகளுக்கு’ (GMP) பொருத்தமான ஒரு மாத்திரை மற்றும் காப்ஸ்யூல் (oral solid dosage) தயாரிப்பு ஆலை வசதியை மேம்படுத்தும். இந்த முதலீடானது உள்நாட்டு மருந்து உற்பத்தித் திறன்களின் விரிவாக்கத்திற்கு ஒத்துழைப்பதுடன், நாட்டின் சுகாதார விநியோகச் சங்கிலியை வலுப்படுத்துவதற்கு பங்களிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சுகாதாரம்
குழுமத்தின் ஹெல்த்கெயார் துறை முதல் காலாண்டில் 9.1 பில்லியன் ரூபா வருவாயைப் பதிவு செய்துள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 5.9% வளர்ச்சியாகும். தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையினால் (NMRA) கொண்டுவரப்பட்ட விலை குறைப்புகள் மற்றும் விநியோகச் சங்கிலி சவால்களின் பாதிப்புகளை ஈடுசெய்வதற்கு, மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்து உற்பத்தி பிரிவுகளின் வளர்ச்சி உதவியுள்ளது.
குறைந்த விற்பனை அளவு மற்றும் பரந்த தொழில்துறை கட்டுப்பாடுகள் காரணமாக, மருந்து முகவர் வணிகம் கடந்த ஆண்டுடன் (YoY) ஒப்பிடுகையில் 18.2% வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. மருத்துவ உபகரணங்கள் பிரிவு 8.8% வருவாய் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ள அதே வேளையில், Healthguard Distribution மற்றும் Healthguard Pharmacy ஆகிய பிரிவுகள் முறையே 0.3% மற்றும் 0.9% என்ற சிறிய அளவிலான வருவாய் வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளன.
இந்தக் காலாண்டில் அரசாங்கத்திற்கான தயாரிப்பு விநியோகங்களின் ஆதரவோடு, Lina Manufacturing நிறுவனம் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 20.5% வலுவான வருவாய் வளர்ச்சியை ஈட்டியுள்ளது.
நுகர்வோர்
நுகர்வோர் (Consumer) துறை 6.6 பில்லியன் ரூபா வருவாயைப் பதிவு செய்துள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 38.0% வளர்ச்சியாகும். இந்தச் செயல்பாடு முக்கியமாக JAPC நிறுவனத்தின் ஒருங்கிணைப்பால் சாத்தியமானது. JAPC நிறுவனத்தை இணைக்காமல் ஆராயும் பட்சத்தில், வர்த்தக நாமங்களைக் கொண்ட தேயிலையின் நெகிழ்வுத்தன்மை மற்றும் இனிப்புப் பண்டங்கள் (confectionery) வணிகத்தின் தொடர்ச்சியான மீட்சி ஆகியவற்றின் ஆதரவோடு, நுகர்வோர் துறையின் வருவாய் 2.1% அதிகரித்துள்ளது.
வட்டவளை தேயிலை மற்றும் Ran Kahata வர்த்தக நாமங்களின் சிறந்த செயல்பாட்டின் மூலம், பிராண்டட் தேயிலை வருவாய் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 8.3% வளர்ச்சியடைந்துள்ளது. அதே நேரத்தில், அதிகரித்த போட்டி காரணமாக உயர்தர தேயிலைப் பிரிவு பாதிக்கப்பட்டுள்ளது. பபுள்கம் மற்றும் வேஃபர்ஸ் (gums and wafers) பிரிவுகளின் மேம்பட்ட செயல்பாட்டின் காரணமாக, இனிப்புப் பண்டங்கள் (Confectionery) வருவாய் 6.9% அதிகரித்துள்ளது.
பிரதான வாடிக்கையாளர்களிடமிருந்து கொள்முதல் அளவு குறைந்ததன் காரணமாக, தேயிலை ஏற்றுமதி வருவாய் 6.3% வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. அதே வேளையில், JAPC நிறுவனத்தின் பலசரக்கு ஏற்றுமதி வணிகமானது, அதன் கறுவாப்பட்டை, தேங்காய், கருமிளகு மற்றும் கிராம்பு ஆகிய தயாரிப்புகளின் ஆதரவோடு 11.5% வருவாய் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
வேளாண்மை
வட்டவளை பிளான்டேஷன்ஸ் விவசாய வணிகத் துறை, 12.7% வருட வளர்ச்சி மற்றும் 2.8 பில்லியன் ரூபா வருவாயைப் பதிவு செய்துள்ளது. இந்தச் செயல்பாடு பனை எண்ணெய் மற்றும் பால் பண்ணை பிரிவுகளில் சன்ஷைன் ஹோல்டிங்ஸ் குழுமத்தின் வலுவான பங்களிப்பைக் காட்டுகிறது.
உயர்ந்த சந்தை விலைகள், அதிகரித்த விற்பனை அளவு மற்றும் மேம்பட்ட பயிர் இருப்பு (விளைச்சல் அதிகரிப்பு) ஆகியவற்றின் ஆதரவோடு, பனை எண்ணெய் (Oil palm) வருவாய் 17.9% அதிகரித்து 2.5 பில்லியன் ரூபாவாக உயர்ந்துள்ளது.
பால் விற்பனை அளவு குறைந்ததாலும், அதிக உள்ளீட்டுச் செலவுகள் காரணமாகவும் பால் பண்ணை வணிகம் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 7.1% வீழ்ச்சியைச் சந்தித்து 258.9 மில்லியன் ரூபாவை வருமானமாக பதிவு செய்துள்ளது. இதன் விளைவாக, விவசாய வணிகத்தின் வட்டி மற்றும் வரிக்கு முன்னரான வருவாய் வரம்பு, கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்திலிருந்த 48.8% வீதத்துடன் ஒப்பிடுகையில் தற்போது 47.2% ஆகக் குறைந்துள்ளது.




