Coca-Coal-வின் ஆதரவுடன் நீர்மின்சாரத்தில் இயங்கும் இலங்கையின் முதல் பிளாஸ்டிக் மறுசுழற்சி நிலையம் தலவாக்கலையில் திறப்பு

Share

Share

Share

Share

கொழும்பு, செவ்வாய், 25 ஆகஸ்ட் 2026: இலங்கையின் பெருந்தோட்டத் துறையில் பிளாஸ்டிக் கழிவு முகாமைத்துவத்தை மறுவரையறை செய்யும் வகையில், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், கழிவு மறுசுழற்சி, சமூக வாழ்வாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை ஒருங்கிணைத்த ஒரு புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தலவாக்கலை டீ எஸ்டேட்ஸ் பிஎல்சி நிறுவனத்திற்குச் சொந்தமான ரதெல்லையில் உள்ள சமர்செட் தோட்டத்தில் சமர்செட் சுற்றுச்சூழல் பொருள் சேகரிப்பு மற்றும் பதப்படுத்தும் நிலையம் (MCPC) நிறுவப்பட்டுள்ளது. இலங்கையில் ‘முறசாரா கழிவு முகாமைத்துவத்தில் பெண்கள் மற்றும் இளைஞர்களின் பங்கேற்பை வலுப்படுத்தும்’ (SWYFT) திட்டத்தின்கீழ், முற்றிலும் நீர்மின்சாரத்தில் இயங்கும் இலங்கையின் முதலாவது பிளாஸ்டிக் கழிவு சேகரிப்பு மற்றும் மறுசுழற்சி நிலையமாக இது இடம்பிடித்துள்ளது. குறிப்பாக, கொகா-கோலா அறக்கட்டளையின் (The Coca-Cola Foundation) நிதி உதவியுடன், ‘ஜனதாக்ஷன்’ நிறுவனத்தால் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இதற்கான மறுசுழற்சி பங்காளியாக நெப்டியூன் ரீசைக்கிளர்ஸ் நிறுவனமும், தோட்டத்துறை பங்காளியாக தலவாக்கலை டீ எஸ்டேட்ஸ் பிஎல்சி நிறுவனமும் செயல்படுகின்றன. Clean Energy எனப்படும் தூய்மையான ஆற்றலையும் கழிவு முகாமைத்துவத்தையும் இணைத்து பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் ஒரு முன்மாதிரியாக இந்த நிலையம் திகழ்கிறது.

இந்த நிலையத்திற்கு தேவையான மின்சாரம் நாணுஓயா ஆற்றில் உள்ள ஒரு சிறிய நீர்மின் நிலையத்திலிருந்து பெறப்படுகிறது. மேலும், சுற்றுப்புறப் பகுதிகளில் பிளாஸ்டிக் கழிவுகளைச் சேகரிக்கப் பயன்படுத்தப்படும் மின்சார முச்சக்கர வண்டிகள் மற்றும் மிதிவண்டிகளுக்கும் இந்த மின்சாரமே பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் கழிவு சேகரிப்பு மற்றும் மறுசுழற்சியால் ஏற்படும் கார்பன் உமிழ்வு கணிசமாகக் குறைக்கப்படுகிறது.

சுற்றுச்சூழல் உணர்திறன் மிக்க நுவரெலியா மலைப்பகுதியில் அமைந்துள்ள இந்த நிலையம், வெறுமனே மறுசுழற்சியுடன் மட்டும் நின்றுவிடாமல் நீர்நிலைகள் மற்றும் மேல்நோக்கிய நீர்ப்பிடிப்பு பகுதிகளைப் பாதுகாக்கவும் உதவுகிறது. நுவரெலியா, நாணுஓயா, அகரபத்தனை, தலவாக்கலை, ரம்பொட மற்றும் ஹற்றன் ஆகிய பகுதிகளில் இருந்து சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் சுற்றுப்புறச் சூழலில் கலப்பது தடுக்கப்படுகிறது. பெண்களால் இயக்கப்படும் இந்நிலையம் மாதத்திற்கு சுமார் மூன்று மெட்ரிக் டன் பிளாஸ்டிக் போத்தல்களை மறுசுழற்சி செய்யும் திறன் கொண்டதுடன், 10 இற்கும் மேற்பட்ட முறைசாரா கழிவு சேகரிப்பாளர்களின் வாழ்வாதாரத்திற்கும் ஆதரவளிக்கிறது.

இதுகுறித்து கொகா-கோலா நிறுவனத்தின் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான பிராந்தியத் தலைவர் மரியோ பெரேரா கருத்து தெரிவிக்கையில், “சமூகங்களும் கழிவு சேகரிப்பு அமைப்புகளும் ஒன்றிணையும் போது தான் நிலையான அபிவிருத்தி மிகவும் சக்திவாய்ந்ததாக மாறுகிறது என்பதை சமர்செட் Eco MCPC நிரூபிக்கிறது. புதுப்பிக்கத்தக்க ஆற்றல், பொறுப்பான கழிவு முகாமைத்துவம், வாழ்வாதார உருவாக்கம் மற்றும் உள்ளூர் கூட்டுறவுகளை ஒரே மாதிரியாக கொண்டு வருவதன் மூலம், இலங்கையில் மிகவும் உள்ளடக்கிய சுழற்சிப் பொருளாதாரம் எப்படி இருக்கும் என்பதைக் காட்ட நாங்கள் உதவுகிறோம். சமூகங்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் நிலையான மதிப்பை உருவாக்கும் தீர்வுகளுக்கு ஆதரவளிப்பதில் கொகா-கோலா அறக்கட்டளை பெருமையடைகிறது.” என்றார்.

இந்த நிலையில், தலவாக்கலை டீ எஸ்டேட்ஸ் பிஎல்சி நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கலாநிதி ரொஷான் ராஜதுரை குறிப்பிடுகையில், “எமது உணர்திறன் மிக்க மேல் நீர்ப்பிடிப்புப் பகுதியைப் பாதுகாக்கும் அதே வேளையில், நிலையான சுற்றுச்சூழல் மற்றும் சமூக மதிப்பை உருவாக்குவதற்காக புதுப்பிக்கத்தக்க ஆற்றல், சுழற்சிக் கழிவு முகாமைத்துவம் மற்றும் சமூக அதிகாரமளித்தல் ஆகியவற்றை ஒருங்கிணைப்பதற்கான எமது அர்ப்பணிப்பை சமர்செட் Eco MCPC பிரதிபலிக்கிறது.” என்றார்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பையும், மக்களின் வாழ்வாதாரத்தையும் இணைக்கும் சமூக அமைப்புகளை உருவாக்குவதில் இது மற்றொரு முக்கிய மைல்கல் என ஜனதாக்ஷன் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியும், நிர்வாகப் பணிப்பாளருமான கலாநிதி ஜனக ஹேமதிலக்க தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சமூக மீள்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கான கொகா-கோலா அறக்கட்டளையின் நீண்டகால அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாக இத்திட்டம் அமைகிறது. ஜனதாக்ஷன் நிறுவனத்துடன் இணைந்து கண்டி, நுவரெலியா, மாத்தளை மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களில் பெண்கள் மற்றும் இளைஞர்களால் வழிநடத்தப்படும் ஐந்து MCPC நிலையங்கள் ஏற்கெனவே நிறுவப்பட்டுள்ளன. சமர்செட் நிலையம் அதன் அடுத்த கட்ட வளர்ச்சியாகும். அதாவது வெறும் மறுசுழற்சி என்பதையும் தாண்டி, தூய்மையான ஆற்றல் மூலம் வளங்களை மீளப் பெற்று பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கும் ஒருங்கிணைந்த அமைப்பாக இது உருவெடுத்துள்ளது.

99x Strengthens AI Capabilities Through...
Huawei Recognized as a Leader...
මැටි පෝරණුවෙන් සැකසෙන රසවත් ආහාරයෙන්...
Huawei හි E-band Microwave RTN...
Huawei-இன் E-band Microwave RTN 3800...
பெருந்தோட்ட உற்பத்தித்திறனை மேம்படுத்த தொழில்நுட்பத்தை கையில்...
Coca-Coal-வின் ஆதரவுடன் நீர்மின்சாரத்தில் இயங்கும் இலங்கையின்...
இலங்கையின் சிறந்த வீட்டு உபயோக வர்த்தக...
பெருந்தோட்ட உற்பத்தித்திறனை மேம்படுத்த தொழில்நுட்பத்தை கையில்...
Coca-Coal-வின் ஆதரவுடன் நீர்மின்சாரத்தில் இயங்கும் இலங்கையின்...
இலங்கையின் சிறந்த வீட்டு உபயோக வர்த்தக...
இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா இடையே தனது...