கடந்த முப்பது ஆண்டுகளாக, இலங்கையின் ஆடைத் தொழிற்துறையானது நாட்டின் ஏற்றுமதிப் பொருளாதாரத்திற்கு அமைதியான முறையில் பெரும் பங்களிப்பை வழங்கி வருகிறது. இது நாட்டின் மொத்த வர்த்தக ஏற்றுமதி வருவாயில் அண்ணளவாக 40 சதவீதத்தைக் கொண்டுள்ளதுடன், 300,000 முதல் 350,000 வரையான மக்களுக்கு வேலைவாய்ப்புகளையும் வழங்கியுள்ளது. இந்த பிரம்மாண்டமான வளர்ச்சி தற்செயலாக நிகழ்ந்தது அல்ல. இது 1990களின் ஆரம்ப காலத்திலிருந்து அரசாங்கமும் ஆடைத் தொழிற்துறையும் இணைந்து திட்டமிட்டு மேற்கொண்ட கூட்டு முயற்சிகளின் மூலம் கட்டமைக்கப்பட்டதாகும்.
200 ஆடைத் தொழிற்சாலைகள் திட்டத்தை மையமாகக் கொண்டு உருவான முதலாவது மாற்றம், ஆடை உற்பத்தியைக் கொழும்புக்கு வெளியேயும் கொண்டு சென்றது. இது கிராமப்புற சமூகங்களில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கியதுடன், இன்றும் இந்தத் துறை இயங்குவதற்குக் காரணமான தொழிற்துறைக்கான வலுவான அடித்தளத்தையும் அமைத்துக் கொடுத்தது. அரசாங்கமும் ஆடைத் தொழிற்துறையும் தனித்தனியாக இயங்காமல், ஒன்றிணைந்து செயல்பட்டதாலேயே இந்தத் திட்டம் வெற்றியைத் தந்தது.
தற்போது இந்தத் தொழிற்துறையானது, அதேபோன்றதொரு கூட்டு மூலோபாயத்தை மீண்டும் எதிர்பார்க்கிறது; ஆனால், முற்றிலும் மாறுபட்ட பல புதிய சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதற்காக இது அவசியமாகியுள்ளது.
இலங்கை அரசாங்கம் நாட்டின் வர்த்தக ஏற்றுமதியை 2025 ஆம் ஆண்டிலிருந்த 13.6 பில்லியன் அமெரிக்க டொலர்களில் இருந்து, 2030 ஆம் ஆண்டில் 28 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்த்துவதை இலக்காகக் கொண்டு, ஒரு லட்சிய தேசிய ஏற்றுமதி மேம்பாட்டுத் திட்டத்தை (NEDP) அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு இணங்க, ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றம் (JAAF) 8 பில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி இலக்கை நோக்கி நகர்கிறது. கடந்த 5 ஆண்டுகளாக ஏற்றுமதி வருவாய் 5 பில்லியன் அமெரிக்க டொலர் அளவிலேயே தேங்கி நிற்கும் பின்னணியில், இது ஒரு ஆழமான சவாலை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது: அதாவது, இந்தத் தொழிற்துறையானது ஒரு காலத்தில் அதன் வளர்ச்சிக்குக் காரணமாய் இருந்த பழைய உற்பத்தி மாதிரியைத் தாண்டி வளர்ந்துவிட்டது.
இதன் அடுத்த கட்டத்திற்கு மதிப்புக் கூட்டல் புத்தாக்கங்கள், தானியக்கமயமாக்கல், உற்பத்தித்திறன், புதிய சந்தைகளை நாடுதல் மற்றும் உலகளாவிய மதிப்புச் சங்கிலியில் மேலும் உயர்மட்டத்திற்கு முன்னேறுதல் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்துவது அவசியமாகும்.
இன்றைய போட்டித் தன்மை முற்றிலும் மாறிவிட்டது. ஆழமான விநியோகச் சங்கிலிகள், பரந்த வர்த்தக வாய்ப்புகள் மற்றும் குறைந்த உற்பத்திச் செலவுகளைக் கொண்ட ஆடை உற்பத்திப் பெரும் நிறுவனங்கள் நம்மை விட முன்னோக்கிச் சென்றுவிட்டன. தற்போது தானியக்கமயமாக்கல், டிஜிட்டல்மயமாக்கல் மற்றும் சுற்றுச்சூழல் நட்பு உற்பத்தி ஆகியவை மற்றவர்களிடமிருந்து நம்மை வேறுபடுத்திக் காட்டும் தனித்துவமான தகுதிகள் அல்ல; மாறாக, அவை இந்தத் துறையில் இருப்பதற்கான அடிப்படைத் தேவைகளாக மாறிவிட்டன. இதனால் ஒரு விஷயம் மட்டும் தெளிவாகத் தெரிகிறது: வெறும் தையல் பிரிவுகளை அதிகரிப்பதன் மூலம் மட்டும் இந்த இடைவெளியை நம்மால் நிரப்ப முடியாது.
தொழில்துறை உண்மையில் எதை எதிர்பார்க்கிறது?
ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களினன் மன்றம் (JAAF) புதிய வெளிநாட்டு நேரடி முதலீடுகளை (FDI) ஈர்ப்பதற்கும், ஏற்கனவே இங்குள்ள உற்பத்தியாளர்கள் ஆடைத் தயாரிப்பில் மட்டுமன்றி, ஜவுளி ஆலைகள், ஆடை அலங்காரப் பொருட்கள் மற்றும் பேக்கேஜிங் ஆகியவற்றிலும் மறுமுதலீடு செய்வதை ஊக்குவிப்பதற்கும் வலுவான முதலீட்டுச் சலுகைகளை வழங்கக் கோரி வருகிறது. உள்நாட்டு விநியோகச் சங்கிலியை வலுப்படுத்துவதன் மூலம், இறக்குமதி செய்யப்படும் மூலப்பொருட்களின் மீதான இலங்கையின் சார்புநிலையைக் குறைப்பதே இதன் நோக்கமாகும்; குறிப்பாகச் செயற்கை நூல் (synthetic yarn) மற்றும் துணி உற்பத்தியில், தற்போது உள்நாட்டு உற்பத்தி தேவையினுடைய வெறும் மூன்றில் ஒரு பகுதியை மட்டுமே பூர்த்தி செய்கிறது. இதனைச் சாத்தியமாக்க, பிற நாடுகள் வழங்கும் சலுகைகளுடன் போட்டியிடக்கூடிய அளவிலான ஒரு முதலீட்டுத் திட்டத்தை இலங்கை கொண்டிருக்க வேண்டும். இல்லையெனில், இந்த நாட்டிற்குள் முதலீடுகள் வராது.
ஆட்டோமேஷன், ரோபோ தொழில்நுட்பம் மற்றும் AI சார்ந்த உற்பத்தி முறைகளை நோக்கி வலுவான முறையில் நகர்வதற்கான தேவையுள்ளது. தொழில்துறை தலைவர்கள் இதனை வெறும் செலவைக் குறைக்கும் ஒரு முயற்சியாகப் பார்க்கவில்லை; மாறாக, ஒட்டுமொத்த ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான உற்பத்தித் திறனை மேம்படுத்தும் ஒரு காரணியாகவே கருதுகின்றனர். மேலும், இது சந்தையில் போட்டித்தன்மையுடன் நீடிப்பதற்கான ஒரு விஷயமாகும்; ஏனெனில், இந்த மாற்றத்தை ஏற்படுத்தாவிட்டால், ஏற்கனவே இந்தத் தொழில்நுட்பப் புரட்சியைச் செய்து முடித்த பிற உற்பத்தி மையங்களை விட இலங்கை மேலும் பின்தங்கும் அபாயம் உள்ளது.
வர்த்தகம் சார்ந்த கோரிக்கைகள் மிகவும் திட்டவட்டமானவை: 2027 ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) புதிய GSP+ சலுகைத் திட்டத்திற்கான விண்ணப்பத்தை முன்னெடுப்பது, அமெரிக்காவுடன் ஒரு முன்னுரிமை வர்த்தக ஏற்பாட்டைப் பெற்றுக் கொள்வது மற்றும் இந்தியாவுடன் தற்போதுள்ள சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை (FTA) வலுப்படுத்துவது ஆகியவையாகும். அத்துடன், தென் கொரியா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுடன் இலங்கை புதிய வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டும் என்றும், இப்பேச்சுவார்த்தைகளை சீராகவும் இலக்கு நோக்கியும் கொண்டு செல்வதற்கு அரசாங்கமும் தொழில்துறையும் இணைந்த ஒரு பிரத்யேக பணிக்குழுவை அமைக்க வேண்டும் என்றும் JAAF விரும்புகிறது.
மிகக் குறைந்த கவர்ச்சிகரமான, ஆனால் மிகவும் நடைமுறைக்குரிய கோரிக்கை என்னவென்றால் நிறுவன ரீதியிலான மாற்றமாகும். தொழில்துறை தலைவர்கள், பல இடங்களில் அலைய வேண்டிய நிலைக்குப் பதிலாக, உண்மையான ஒரு ‘ஒரே கூரையின் கீழ் அனைத்து சேவைகளையும் வழங்கும்’ முறை உருவாக்கப்பட வேண்டும் என்று கூறுகின்றனர். இதன் பொருள் விரைவான அனுமதிகள், ஏற்றுமதியாளர்களுக்கான தெளிவான VAT நடைமுறைகள், நிறுவனங்கள் வெளிநாட்டு நாணயங்களில் பரிவர்த்தனை செய்வதற்கான அதிக நெகிழ்வுத்தன்மை மற்றும் நீண்டகாலமாகத் தாமதிக்கப்பட்டு வரும் தொழிலாளர் சட்ட சீர்திருத்தங்கள் ஆகியவையாகும்.
ஆற்றல் கொள்கையும் மிக முக்கியமான ஒன்றாகும். உற்பத்தியாளர்களுக்கு அதிக நம்பகமான மற்றும் நிலையான ஆற்றல் விருப்பங்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு, Battery storage வலுவான சலுகைகளுடன் சேர்த்து, திறந்த அணுகல் மற்றும் மின்சாரப் பகிர்வு விதிமுறைகளை விரைவுபடுத்துவதை நோக்கிய நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவை எதுவுமே தனித்து இயங்குபவை அல்ல. புதிய முதலீடு, உற்பத்தித் திறன் அதிகரிப்பு, உள்ளூர் விநியோகச் சங்கிலி மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் போன்ற தொழில்துறையின் அர்ப்பணிப்புகளுக்கு ஈடாக; சந்தை அணுகல், போட்டித்தன்மைமிக்க வரிச் சூழல், வணிகம் செய்வதற்கான செலவுகளைக் குறைத்தல் மற்றும் ஒழுங்குமுறை நிச்சயம் ஆகியவற்றை அரசாங்கத்திடமிருந்து தொழில்துறை எதிர்பார்க்கிறது.
இதன் முக்கியத்துவம் ஒரு குறிப்பிட்ட தொழில்துறையைத் தாண்டியது. இது இழந்த ஏற்றுமதிச் சந்தையை இலங்கை மீண்டும் மீட்டெடுப்பதற்கான ஒரு திட்டம் மட்டுமல்ல. இது தற்போதைய நிலையை விட உலகளாவிய பொருளாதார அதிர்ச்சிகளைச் சிறப்பாகத் தாங்கக்கூடிய, அதிக மதிப்புமிக்க மற்றும் மீளெழுச்சிமிக்க ஆடைத் தொழில்துறையை உருவாக்குகிறது.
இந்தச் செயல்திட்டம் வடிவம் பெறுமா என்பது, தொழில்துறையின் முன்மொழிவுகளுக்கு ஏற்ப அரசாங்க முகவர் அமைப்புகள் எவ்வளவு விரைவாக உண்மையான கொள்கைகளை வகுக்கின்றன என்பதைப் பொறுத்தே அமையும். மூன்று தசாப்தங்களுக்கு முன்னர், இதேபோன்ற ஒரு ஒருங்கிணைந்த இலக்கு இலங்கையின் ஆடைத் தொழில்துறையை மறுவடிவமைத்தது. போட்டி முன்னெப்போதையும் விடக் கடுமையாக இருக்கும் இந்தத் தருணத்தில், அதே போன்ற ஒருங்கிணைப்பு மீண்டும் சாத்தியமா என்பதுதான் தற்போதைய கேள்வியாகும்.





