இலங்கை மருந்தாக்கல் கைத்தொழில் சம்மேளனம் (SLCPI), அண்மையில் ஏற்பட்ட ‘திட்வா’ புயல் அனர்த்தத்தினைத் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் தேசிய மீட்புப் பணிகளுக்கு ஆதரவளிப்பதற்காக நிறுவப்பட்ட அரசின் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு 50 மில்லியன் ரூபாவை நன்கொடையாக வழங்குவதாக அண்மையில் அறிவித்திருந்தது.
இந்த நிதியுதவி, இலங்கை மருந்தாக்கல் கைத்தொழில் சம்மேளனத்தின் செயற்குழுவினால், அண்மையில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சில் வைத்து சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸவிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது. சன்ஷைன் ஹெல்த்கெயார் லங்கா நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரும், SLCPI இன் தலைவருமான சாந்த பண்டார தலைமையிலான தூதுக்குழுவினர் இதனை கையளித்தனர். இதில் சம்மேளனத்தின் ஏனைய அதிகாரிகளான முன்னாள் தலைவர் மயில்வாகனம் பிரதாபன், உப தலைவர்களான நிஷாந்த வீரசிங்க, கலாநிதி மகேஷ ரணசோம மற்றும் செயலாளர் ஐவின் ஜேசுமணி ஆகியோரும் கலந்துகொண்டனர்.
சுகாதார சேவைகளை வலுப்படுத்துவதற்கும், அத்தியாவசிய உட்கட்டமைப்புகளை மீளக்கட்டியெழுப்புவதற்கும் ஆதரவளிக்கும் நோக்கிலேயே இந்த நன்கொடை வழங்கப்படுவதாக SLCPI குறிப்பிட்டது. மீட்புப் பணிகளின் போது சுகாதார சேவைகள் உள்ளிட்ட முக்கியமான பொதுச் சேவைகள் தடையின்றித் தொடர்வதை உறுதிப்படுத்துவதற்கும், அமைச்சின் அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கைகளுக்கும் இந்த நிதிப் பங்களிப்பு உறுதுணையாக அமையும் என சம்மேளனம் மேலும் தெரிவித்துள்ளது.
SLCPI இன் தலைவர் சாந்த பண்டார இது குறித்துக் கூறுகையில்: “இலங்கையின் மீளெழுச்சியானது, சேதமடைந்தவற்றை மீண்டும் கட்டியெழுப்பும் அதேநேரம், அத்தியாவசிய சேவைகளைத் தடையின்றி முன்னெடுப்பதிலும் தங்கியுள்ளது. இந்த நிதிப் பங்களிப்பானது, மருந்துத் துறையில் ஏற்ப்பட்ட அனர்த்தங்களுக்கான உடனடித் தீர்வுகளுக்கும், சுகாதார அமைப்பின் மீள்திறனை மீட்டெடுப்பதற்கான நீண்டகாலப் பணிகளுக்கும் ஆதரவளிக்கிறது. பொறுப்புடன் செயல்படுவதற்கும், பெரியளவில் ஆதரவைத் திரட்டுவதற்கும், நடைமுறை ரீதியாக தேசிய மறுசீரமைப்பிற்கு பங்களிப்பதற்கும் எமது உறுப்பினர்களின் கூட்டு அர்ப்பணிப்பைக் எடுத்துக் காட்டுகிறது,” என தெரிவித்தார்.
சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ இது குறித்துக் கூறுகையில், “‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு இலங்கை மருந்தாக்கல் கைத்தொழில் சம்மேளனம் வழங்கிய பங்களிப்பை நாங்கள் பாராட்டுகிறோம். இவ்வாறான ஆதரவுகள், தேசிய சவால்கள் நிலவும் காலங்களில் அத்தியாவசிய சுகாதார சேவைகளைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்கும், மீட்புப் பணிகளின் போது சேவை வழங்கல்களை வலுப்படுத்துவதற்கும் முக்கியமானவை,” என தெரிவித்தார்.
இறக்குமதியாளர்கள், உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் என 70க்கும் மேற்பட்ட உறுப்பு நிறுவனங்களைக் கொண்ட ஒரு உயர்மட்ட பிரதிநிதித்துவ அமைப்பாக SLCPI செயற்படுகின்றது. இவை அனைத்தும் இணைந்து, நாட்டின் தனியார் மருந்துச் சந்தையில் 80%க்கும் அதிகமான பங்கினைக் கொண்டுள்ளன. இத்துறை நேரடியாக 80,000க்கும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்பை வழங்குகின்றதுடன், மறைமுகமாக மேலும் சுமார் 400,000 பேருக்கு வாழ்வாதாரமாகத் திகழ்கின்றது. இதன்மூலம் தேசிய பொருளாதாரம் மற்றும் சுகாதார சேவை வழங்கலில் குறித்த நிறுவனமம் முக்கிய பங்களிப்பாளராக திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.



