அமெரிக்கத் தேவையின் காரணமாக மே மாதத்தில் இலங்கையின் ஆடை ஏற்றுமதி சுமார் 8% அதிகரிப்பு

Share

Share

Share

Share

மே 2026இல் இலங்கையின் ஆடை மற்றும் ஜவுளி ஏற்றுமதி 7.96% அதிகரித்து 394.14 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது. இது இந்த ஆண்டின் மிகச் சிறந்த ஒற்றை மாத செயல்பாடாகும். மேலும், ஆண்டின் கடினமான தொடக்கத்திற்குப் பிறகு முக்கிய சந்தைகளின் தேவை சீரடையத் தொடங்கியுள்ளதை இது காட்டுகிறது.

அமெரிக்காவிற்கான ஏற்றுமதி 15.36% அதிகரித்து 149.96 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியதன் மூலம் இந்த வளர்ச்சியில் அமெரிக்கா முன்னிலை வகிக்கிறது. இத்துறையின் பாரம்பரிய மூன்று முக்கிய சந்தைகளைத் தவிர்த்த பிற நாடுகளுக்கான ஏற்றுமதியும் 14.61% வலுவாக அதிகரித்து 70.67 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது. அதேவேளையில், ஐக்கிய இராச்சியம் (UK) 0.87% என்ற சிறிய வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் (EU) மட்டுமே 0.3% வீழ்ச்சியடைந்து 121.35 மில்லியன் அமெரிக்க டொலர்களாகக் குறைந்து, வீழ்ச்சியைக் கண்ட ஒரே சந்தையாக மாறியுள்ளது.

அமெரிக்கச் சந்தையின் இந்த மீட்சியானது இத்துறைக்கு மிகவும் முக்கியமான ஒரு தருணத்தில் ஏற்பட்டுள்ளது. கட்டாய உழைப்பைக் கொண்டு உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் இறக்குமதித் தடை குறித்த 301 விசாரணையை அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதியுடன் (USTR) இலங்கை தற்போது மேற்கொண்டு வருகிறது. இது இலங்கைக்கு 10% அல்லது 12.5% கூடுதல் வரி விதிப்பைத் தீர்மானிக்கும். ஜூன் மாதம் வெளியிடப்பட்ட அறிக்கை, 12.5% கூடுதல் வரி விதிக்கப்படவுள்ள 46 நாடுகளின் பட்டியலில் இலங்கையைச் சேர்த்துள்ளது. கட்டாய உழைப்பால் தயாரிக்கப்படும் பொருட்களின் இறக்குமதிக்கு எதிராக ஏற்கனவே சில நடவடிக்கைகளை எடுத்துள்ளதன் காரணமாக, இலங்கையின் போட்டி நாடுகளுக்கு (பங்களாதேஷ், கம்போடியா, பாகிஸ்தான் மற்றும் இந்தோனேசியா உட்பட) 10% என்ற குறைவான வரி விகிதம் வழங்கப்பட்டுள்ளது. இந்த முன்மொழிவு மீதான பகிரங்க விசாரணை வாஷிங்டனில் ஜூலை 7 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

அத்துடன், தொழில்துறை அமைப்புகள் தமக்கான விசாரணை நேரத்தை ஒதுக்கக் கோருவதற்கு ஜூன் 22 ஆம் திகதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதனால், வரும் வாரங்கள் இலங்கை தனது தரப்பு நியாயங்களை முன்வைப்பதற்கான மிக முக்கியமான காலகட்டமாகும்.

கொள்கை ரீதியிலான விவாதங்களும் வர்த்தக எண்களும் துல்லியமாக இணையும் புள்ளி இதுவேயாகும். மே மாதத்தில் அமெரிக்க சந்தையில் காணப்பட்ட வலுவான வளர்ச்சி, வரி விதிப்பு அழுத்தங்களுக்கு மத்தியிலும் அமெரிக்க வாங்குபவர்கள் இலங்கையிலிருந்து தீவிரமாக பொருட்களை கொள்வனவு செய்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது. இது தரம், நெறிமுறை இணக்கம் மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றில் இலங்கைக்கு இருக்கும் நீண்டகால நற்பெயரின் பிரதிபலிப்பாகும். நியாயமான ஒரு வரி விதிப்பு முடிவை உறுதி செய்வதன் மூலம், வாங்குபவர்களின் இந்த அடிப்படை நம்பிக்கையை மிகவும் நிலையான மற்றும் நீடித்த ஒரு வர்த்தக நிலையாக மாற்றுவதற்கான வாய்ப்பு இப்போது இலங்கைக்கு கிடைத்துள்ளது.

ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றம் (JAAF), போட்டி நாடுகளுக்கு இணையான வரி விகிதங்களை இலங்கைக்கும் வழங்குமாறு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது.

தற்போதைய இந்தச் செயல்முறையில் இலங்கைக்குக் கிடைக்கும் வெற்றிகரமான முடிவு, மே மாதத்தில் காணப்பட்ட ஊக்கமளிக்கும் அறிகுறியைத் தொடர்ச்சியான வளர்ச்சியாக மாற்ற உதவும்.

ஆண்டின் ஒட்டுமொத்த படம், தொழில்துறை எதிர்கொண்டுவரும் சவால்களை இன்னும் பிரதிபலிக்கிறது. ஜனவரி–மே 2026 காலப்பகுதிக்கான ஏற்றுமதிகள் 1,926.85 மில்லியன் அமொிக்க டொலராக உள்ளது, இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தை விட 4.68% குறைவாகும். அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐக்கிய இராச்சியம் அனைத்தும் ஒட்டுமொத்தமாக எதிர்மறையான பகுதியில் உள்ளன. ஆனால் மே மாத செயல்திறன், இந்தத் தொழில்துறை ஆண்டின் இரண்டாம் பாதியில் மீண்டு வர இடமிருக்கிறது என்பதைக் குறிக்கிறது – குறிப்பாக கட்டணப் பிரச்சினை சாதகமாக தீர்க்கப்பட்டு, வாங்குவோரின் நம்பிக்கை தொடர்ந்து அதிகரித்தால்.

ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றம் (JAAF) கூறுகையில், “மே மாதத்தின் எண்ணிக்கைகள் உண்மையிலேயே ஊக்கமளிக்கின்றன, மேலும் அவை சவாலான வர்த்தகச் சூழலிலும் கூட எங்கள் வாங்குவோர் இலங்கை உற்பத்தித் துறையில் தொடர்ந்து வைத்துள்ள நம்பிக்கையைப் பிரதிபலிக்கின்றன. எங்களின் தற்போதைய கவனம் வாஷிங்டனில் நியாயமான மற்றும் போட்டித்தன்மையான கட்டண முடிவைப் பெறுவதில் உள்ளது. இதன்மூலம் இந்த வேகம் குறுகியகால ஆதாயமாக அல்லாமல் நீண்டகால வளர்ச்சியாக மாற்றப்பட வேண்டும். சரியான கொள்கை ஆதரவுடன், 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதி இந்தத் துறைக்கு கணிசமாக வலுவாக அமையும் என்று நாங்கள் நம்பிக்கையுடன் உள்ளோம்.”

அமெரிக்காவில் விசாரணைச் செயல்முறை இப்போது அதன் மிக முக்கியமான கட்டத்திற்குள் நுழைந்துள்ள நிலையில், அடுத்த சில மாதங்கள் இலங்கை தனது மிகப்பெரிய சந்தையில் மேலும் போட்டித்தன்மையான நிலையைப் பிடிக்க முடியுமா என்பதற்கும், மே மாதத்தின் வலுவான செயல்திறனை இத்துறையின் நீடித்த மீட்சியின் ஆரம்பமாக மாற்ற முடியுமா என்பதற்கும் ஒரு முக்கிய சோதனையாக அமையும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜனசக்தி பைனான்ஸ், சிறந்த சேவையை முன்னெடுப்பதற்காக...
சிறந்த சில்லறை விற்பனையாளர்களை கௌரவிக்கும் Retailer...
Sampath Bank Enhances Care at...
Colombo Dockyard to Build Ultra-Modern...
ගල්ඔය සීනි කර්මාන්තශාලාව ශ්‍රී ලාංකේය...
China Unicom and Huawei Release...
Samsung Sri Lanka to Open...
Janashakthi Finance celebrates 45 years...
China Unicom and Huawei Release...
Samsung Sri Lanka to Open...
Janashakthi Finance celebrates 45 years...
බලශක්ති පෙරළියෙන් ඇඟලුම් ක්ෂේත්‍රයට නව...