தேயிலை உற்பத்தியையும் முக்கிய ஏற்றுமதி சந்தைகளையும் சீராக வைத்திருப்பதற்கு ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவை எனத் தோட்ட உரிமையாளர்கள் கூறுகின்றனர்

Share

Share

Share

Share

மேற்கு ஆசியா மற்றும் ஹார்முஸ் நீரிணைப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள முன்னெப்போதும் இல்லாத நெருக்கடியைக் கருத்திற்கொண்டு, பெருந்தோட்டத் துறையின் செலவு அமைப்புகளை அவசரமாக மறுஆய்வு செய்து முறைப்படுத்துமாறு இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் (PA) கோரிக்கை விடுத்துள்ளது.

தற்போது, இலங்கையின் மொத்த வருடாந்த தேயிலை ஏற்றுமதியில் சுமார் 45% — அதாவது இலங்கையின் மொத்த 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் தேயிலை ஏற்றுமதி வருமானத்தில் சுமார் 680 மில்லியன் அமெரிக்க டொலர் — ஈரான், ஈராக், ஐக்கிய அரபு இராஜ்ஜியம் மற்றும் சவூதி அரேபியா உள்ளிட்ட மத்திய கிழக்கு சந்தைகள் மூலமே ஈட்டப்படுகிறது.

தூய இலங்கை தேயிலைக்கு இச்சந்தைகள் மிக முக்கியமானவை என்பதைக் கருத்திற்கொண்டு, ஆண்டின் தொடக்கத்திலிருந்தே விநியோகம் மற்றும் கேள்வி ஆகிய இரு பக்கங்களிலும் உருவாகி வரும் தடைகள், ஒட்டுமொத்த பெருந்தோட்டத் துறைக்கும் முன்னெப்போதும் இல்லாத வாழ்வாதாரச் சவால்களை ஏற்படுத்தியுள்ளதாக பெருந்தோட்ட உரிமையாளர் சங்கம் கவலையுடன் குறிப்பிட்டுள்ளது. இச்சவால்கள் தேயிலை மற்றும் இறப்பர் துறையிலுள்ள பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்கள் (RPCs) மற்றும் சிறுதோட்ட உரிமையாளர்கள் என இரு தரப்பினரையும் பாதித்துள்ளன.

தற்போது, தேயிலை மற்றும் இறப்பர் உற்பத்திக்கான மொத்தச் செலவில் சுமார் 70% ஊதியங்களுக்காகவே செலவிடப்படுகிறது. எரிபொருள், உரம், இரசாயனங்கள், விறகு, பொதி செய்யும் பொருட்கள் மற்றும் ஏனைய பௌதீகப் பொருட்கள் போன்ற உள்ளீட்டுச் செலவுகள் மீதமுள்ள உற்பத்திச் செலவாக அமைகின்றன.

2026 ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வந்த மிகச் சமீபத்திய ஊதிய உயர்வு வரை, பெருந்தோட்டத் துறையின் ஊதியங்கள் அந்தத் தொழில்துறைக்கு நீண்டகாலமாகத் தொடரும் ஒரு சர்ச்சைக்குரிய சவாலாகவே இருந்து வந்துள்ளன.

தொழிலாளர்களின் ஊதியத்தை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்கள் (RPCs) கொள்கை ரீதியாக எப்போதும் ஏற்றுக்கொண்ட போதிலும், இலங்கையின் பெருந்தோட்டத் துறையில் காணப்படும் மிக அதிகமான உற்பத்திச் செலவு மற்றும் குறைந்த உற்பத்தித்திறன் ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு, ஊதிய உயர்வை நடைமுறைப்படுத்துவதற்கு நிதி ரீதியான நிலையான ஒரு பொறிமுறையையே இத்துறை தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்துள்ளது.

1992இல் தேசியமயமாக்கப்பட்ட நிர்வாகக் காலம் முடிவுக்கு வந்து, தனியார்மயமாக்கல் தொடங்கியதைத் தொடர்ந்து, பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்கள் (RPCs), தொழிற்சங்கங்கள் மற்றும் இலங்கை முதலாளிமார் சம்மேளனம் ஆகியவற்றிற்கு இடையேயான கூட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே பெருந்தோட்டத் துறை ஊதியங்கள் நிர்ணயிக்கப்பட்டன.

2021 ஆம் ஆண்டில், தொழிற்சங்கங்கள் ஒருதலைப்பட்சமாக இச்செயல்முறையிலிருந்து விலகியதுடன், 2021-2023 காலப்பகுதியில் 1,000 ரூபாய் தினசரி ஊதியத்தையும், பின்னர் செப்டம்பர் 2024 இல் 1,350 ரூபாயையும் கட்டாயமாக்குவதற்கு ஊதியக் கட்டளைச் சட்டத்தைப் பயன்படுத்துமாறு அரசாங்கத்திற்கு வெற்றிகரமாக அழுத்தம் கொடுத்தன.

வரலாற்றில் முதல்முறையாக, தற்போதைய அரசாங்கம் தொழில்துறையின் கூட்டிறுப்பு உற்பத்தித் துறையான பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்களுடன் (RPCs) தொடர்ச்சியான ஆலோசனைகளை நடத்தியதைத் தொடர்ந்து, மிகச் சமீபத்திய ஊதிய உயர்வுக்குப் பகுதியளவில் மானியம் வழங்கத் தலையிட்டுள்ளது.

2026 ஜனவரி 1 முதல் தினசரி ஊதியம் 400 ரூபாயால் அதிகரித்து 1,750 ரூபாயாக உயர்ந்துள்ளதன் மூலம் தொழிலாளர்கள் தெளிவான நிகர இலாபத்தைப் பெற்றுள்ளனர். இதில் ஒரு தொழிலாளிக்கு நாளொன்றுக்கு அரசாங்கம் வழங்கும் 200 ரூபாய் பங்களிப்பும் உள்ளடங்குவதுடன், மீதமுள்ள தொகையை பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்கள் (RPCs) பொறுப்பேற்றுள்ளன.

கடந்த தசாப்தத்தில், இலங்கை பெருந்தோட்டத் துறை பல்வேறு நெருக்கடி நிலைகளை எதிர்கொண்டுள்ளது. உரம், விவசாய இரசாயனங்கள் மற்றும் பயிர் பல்வகைப்படுத்தல் தொடர்பாக முந்தைய அரசாங்கங்கள் எடுத்த தற்காலிக முடிவுகளால் இவை ஏற்பட்டன. அதனைத் தொடர்ந்து COVID Lockdownகள், 2022 பொருளாதார நெருக்கடி மற்றும் மிக சமீபத்தில் ஏற்பட்ட டிட்வா சூறாவளி ஆகியவற்றால் ஏற்பட்ட இடையூறுகள் தொடர்ந்தன. இந்த நிகழ்வுகள் ஒவ்வொன்றும் ஏற்கனவே இலங்கை பெருந்தோட்டங்களுக்கு கணிசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.

உற்பத்திச் செலவின் தொடர்ச்சியான அதிகரிப்பு மற்றும் அதில் அடங்கியுள்ள ஊதியச் செலவு ஆகியவற்றால், ஒட்டுமொத்த பெருந்தோட்டத் துறையும் முன்னெப்போதும் இல்லாத அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளது. வளைகுடா பிராந்தியத்தில் நிலவும் மோதல்கள் உடனடியாகக் குறைந்தாலும் கூட, நாம் ஏற்கனவே எதிர்கொண்ட அனைத்துத் தடைகளும் இலங்கையை ஒரே நேரத்தில் தாக்கும் சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன. உரத்தின் இருப்பு குறித்த நிச்சயமற்ற நிலை உற்பத்தித்திறனை அச்சுறுத்துவதுடன், 2026 ஆம் ஆண்டில் 300 மில்லியன் கிலோகிராம் தேயிலை உற்பத்தியை எட்டும் இத்துறையின் திறன் குறித்து மேலும் கேள்விகளை எழுப்புகிறது.

தற்போதைய மோதல்கள் உலகளாவிய உர உற்பத்தியின் பெரும் பகுதிக்கான விநியோகப் பாதைகளை அச்சுறுத்தி வருவதால், 2026 மற்றும் 2027 ஆம் ஆண்டுக்கான உற்பத்தி இலக்குகளை உறுதிப்படுத்த, உள்ளீட்டுப் பொருட்களின் பாதுகாப்பில் முன்கூட்டியே நடவடிக்கை எடுப்பது அவசியமாகும்.

ஒன்றிணையும் இந்த அழுத்தங்களைக் கருத்தில் கொண்டு, உர இருப்புகளைப் பாதுகாப்பதற்கான அவசரகால நடவடிக்கைகள், குறிப்பாக சிறு விவசாயிகளுக்கான செயல்பாட்டு மூலதன ஆதரவை நிறுவுதல், விற்பனையாகாத இருப்புகளை உத்திப்பூர்வமாக நிர்வகித்து சேமித்து வைத்தல், மற்றும் இலங்கை தேயிலையின் உயர்தர நிலைப்பாடு அதிக இலாப வரம்புகளைப் பெறக்கூடிய சந்தைகளைப் பல்வகைப்படுத்துவதற்கான துரிதப்படுத்தப்பட்ட முயற்சி உள்ளிட்ட பல முன்னுரிமைப் பகுதிகளில் ஒருங்கிணைந்த நடவடிக்கையை PA வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

22/5/2026
Hellmann மற்றும் MAS ஹோல்டிங்ஸ் இலங்கையில்...
ඇමරිකානු ආයෝජිකා Sandhya Ajjarapu, Kandy...
Hellmann සහ MAS සමූහය එක්ව...
10 වන Huawei ICT තරඟයේ...
GWM வாகன அணுகலை விரிவுபடுத்தும் வகையில்,...
Prime Group strengthens commitment to...
Hellmann and MAS Holdings launch...
GWM வாகன அணுகலை விரிவுபடுத்தும் வகையில்,...
Prime Group strengthens commitment to...
Hellmann and MAS Holdings launch...
Prime Melwa Formally Commences Asia’s...