இந்திய சுற்றுலாப் பயணிகள் எளிதாக பணம் செலுத்த வசதியாக இலங்கையில் UPI கட்டண முறையை விரிவுபடுத்தும் NPCI இன்டர்நேஷனல்

Share

Share

Share

Share

2026 மார்ச் 17, செவ்வாய்க்கிழமை, இலங்கையில்: இந்திய தேசிய கட்டண வலையமைப்பின் (NPCI) சர்வதேச பிரிவான NIPL இன்டர்நேஷனல் (NIPL) நிறுவனம், இலங்கை முழுவதும் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் UPI கட்டண முறையை விரிவுபடுத்துவதற்கான தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இதன் மூலம், இந்திய பயணிகள் இலங்கையில் எளிதாக பணம் செலுத்த வசதியேற்படுத்துவதோடு, இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்துவதும், இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் கலாச்சார உறவுகளை மேலும் வலுப்படுத்துவதும் நோக்கமாகும்.

இந்தியாவின் UPI என்பது, மொபைல் செயலி (App) மூலம் உடனடியாகவும் பாதுகாப்பாகவும் பணம் செலுத்த உதவும் ஒரு அமைப்பாகும். மாதத்திற்கு 20 பில்லியனுக்கும் அதிகமான நிதிப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் இது, உலகின் மிக முன்னேறிய டிஜிட்டல் கட்டண முறைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்தியா முழுவதும் 700 மில்லியனுக்கும் அதிகமான இடங்களில் பயன்படுத்தப்படும் இந்த அமைப்பு, அதன் நெகிழ்வுத்தன்மை காரணமாக, இலங்கையின் LankaQR வலையமைப்பு உள்ளிட்ட பிற சர்வதேச கட்டண முறைகளுடன் மிக எளிதாக இணைக்கப்படும் திறன் கொண்டது.

இலங்கைக்கு அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் நாடு இந்தியாவாகும். 2024 ஆம் ஆண்டில் 416,000 இந்திய சுற்றுலாப் பயணிகள் வருகை தந்திருந்த நிலையில், 2025 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 531,000 ஆக அதிகரித்துள்ளது. ஆண்டுதோறும் இவ்வாறு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வருவதால், எளிதாகவும் நம்பகத்தன்மையுடனும் பணம் செலுத்தக் கூடிய ஒரு முறையின் தேவை மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. விடுமுறை கொண்டாட்டம், திருமண வைபவங்கள் மற்றும் அங்காடி வணிகம் (ஷாப்பிங்) ஆகியவற்றுக்காக அதிகளவில் இந்திய சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகை தருவதால், அவர்கள் தேவையான பணப் பரிவர்த்தனைகளை எளிதாகவும் பாதுகாப்பாகவும் செய்து கொள்ள வசதிகள் ஏற்படுத்திக் கொடுப்பது மிகவும் முக்கியமானதாகும்.

NPCI International மற்றும் LankaPay நிறுவனங்களுக்கு இடையிலான தற்போதைய ஒத்துழைப்பின் மூலம், இந்திய பயணிகள் தங்களின் UPI வசதி கொண்ட மொபைல் செயலிகள் (App’s) மூலம் எந்தவொரு LankaQR குறியீட்டையும் ஸ்கேன் செய்து இலங்கை முழுவதும் டிஜிட்டல் கட்டணங்களைச் செய்ய முடியும். இதனால், அவர்கள் கையில் பணத்தை எடுத்துச் செல்ல வேண்டியதும் இல்லை, பணத்தை மாற்றிக்கொள்ள வேண்டியதும் இல்லை. தற்போதே Cinnamon Hotel வலையமைப்பு, Taj ஹோட்டல் குழுமம், Barista, Keells சூப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் Odel போன்ற முன்னணி ஹோட்டல்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் இந்த வசதி செயல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சேவையை மேலும் விரிவுபடுத்துவதற்காக NIPL, இலங்கை மத்திய வங்கி மற்றும் இங்குள்ள வங்கிகளுடன் நெருக்கமாக செயல்பட்டு வருகிறது. இலங்கையில் இருக்கும் கட்டண முறைகளுக்கு ஏற்றவாறு UPI கட்டண வசதியை மேலும் விரிவுபடுத்துவதே அவர்களின் நோக்கமாகும்.

இந்த முறையானது சுற்றுலாப் பயணிகளுக்கு மட்டுமல்லாது, இலங்கை வணிகர்களுக்கும் பயனுள்ளதாக அமைகிறது. சுற்றுலாப் பயணிகள் தங்களது இந்திய வங்கிக் கணக்குகளிலிருந்து நேரடியாக பணம் செலுத்த முடியும். மேலும், மாற்று விகிதங்களையும் தெளிவாகக் காண முடியும். இலங்கையில் உள்ள வணிகர்களுக்கு, நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களை அதிகளவில் ஈர்ப்பதற்கும், பணப் பயன்பாட்டை எளிதாக்குவதற்கும், மற்றும் ரொக்கம் மற்றும் காசுகளின் பயன்பாட்டைக் குறைத்து தினசரி வணிக நடவடிக்கைகளை மிகத் திறமையாகச் செய்வதற்கும் இது வாய்ப்பளிக்கும்.

இது குறித்து கருத்து தெரிவித்த NPCI Internationalஇன் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ரித்தேஷ் சுக்லா கூறுகையில், “தொழில்நுட்பத்தின் மூலம் நாடுகளை ஒன்றோடொன்று இணைப்பதில் NPCI International உறுதிபூண்டுள்ளது.

இலங்கையுடனான எங்களது இந்த உறவுமுறையானது, டிஜிட்டல் கட்டணப் பயன்பாட்டை மேம்படுத்துதல், மில்லியன் கணக்கான மக்களுக்கு பயணம் மற்றும் வணிகத்தை எளிதாக்குதல், அத்துடன் இங்குள்ள வணிகங்களுக்கும் ஒட்டுமொத்த பொருளாதாரத்திற்கும் பயன்களை வழங்குதல் ஆகியவற்றுக்கான இரு நாடுகளின் பொதுவான நோக்கத்தையே காட்டுகிறது. LankaPay உடன் இணைந்து அறிமுகப்படுத்தும் இந்த பாதுகாப்பான மற்றும் விரைவான கட்டண முறையானது, இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்பதில் நாங்கள் உறுதியாக நம்புகிறோம்” என தெரிவித்தார்.

UPI முறைமை மேலும் விரிவடையும் போது, ஹோட்டல்கள், கடைகள் மற்றும் பிற சுற்றுலா சேவைகளுக்கும் இந்த வசதியை வழங்குவதற்காக NIPL நிறுவனம் இலங்கை அதிகாரிகளுடன் தொடர்ந்து செயல்படும். உலகளவில் நிகழும் உடனடிக் கட்டணப் பரிவர்த்தனைகளில் 49%ஐ மேற்கொள்ளும், உலகின் மிகப்பெரிய கட்டண முறைமையாக UPI-ஐ சர்வதேச நாணய நிதியம் (IMF) அங்கீகரித்துள்ளது. இது, இலங்கை வணிகர்களுக்கு இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு உயர்தர சேவையை வழங்குவதற்கும், இரு நாடுகளுக்கும் இடையிலான வணிகத்தை மேம்படுத்துவதற்கும் கிடைத்துள்ள சிறந்த வாய்ப்பாகும் என்பதைச் சுட்டிக்காட்டலாம்.

மேலதிக தகவல்களுக்கு https://www.nipl.com/ என்ற இணையத்தளத்திற்கு பிரவேசிக்கவும்.

கல்டெக்ஸ் அபிமானி STEM துறையில் அடுத்த...
டிஜிட்டல் யுகத்தில் ரமழான்: சமூக வலைத்தளங்கள்...
Samsung Sri Lanka Unveils New...
FitsAir நிறுவனத்துடன் இணைந்து அகமதாபாத் –...
835 BYD ATTO 1 வாகனங்களின்...
කොකා-කෝලා බෙවරේජස් ශ්‍රී ලංකා 2026...
BYD සහ DENZA වාහනවලට පමණක්...
Bairaha Farms Wins NCE Gold,...
කොකා-කෝලා බෙවරේජස් ශ්‍රී ලංකා 2026...
BYD සහ DENZA වාහනවලට පමණක්...
Bairaha Farms Wins NCE Gold,...
Capital Trust Properties’ Minoli Wickramasinghe...