இலங்கையின் முன்னணி ஒருங்கிணைந்த கோழி இறைச்சி உற்பத்தி நிறுவனமான பைரஹா ஃபார்ம்ஸ் பிஎல்சி (Bairaha Farms PLC), தனது உற்பத்தி ஆற்றல், கையிருப்பு முகாமைத்துவம் மற்றும் அதன் விநியோகச் சங்கிலி ஊடான செயற்பாட்டு திறன் ஆகியவற்றை மேம்படுத்தும் பயணத்தின் ஒரு மைல்கல்லாக 500 டன் கொள்ளளவு கொண்ட குளிரூட்டப்பட்ட புதிய களஞ்சிய கூடம் ஒன்றை (Cold storage facility) ஆரம்பித்துள்ளது.
2026 ஜனவரி 14ஆம் திகதி பைரஹா ஃபார்ம்ஸ் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரியால் யாகூப் அவர்களினால் குளிரூட்டப்பட்ட களஞ்சிய கூடம் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் நிறுவனத்தின் பணிப்பாளர் உறுப்பினர்கள், முகாமைத்துவ சபை அங்கத்தவர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
இது குறித்து கருத்து தெரிவித்த பைரஹா ஃபார்ம்ஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி யாகூத் நளீம், “உள்நாட்டு விநியோகம் மற்றும் ஏற்றுமதி நடவடிக்கைகளை வலுப்படுத்துவதில் இப்புதிய வசதி முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கிறோம். கடந்த சில ஆண்டுகளில் எமது உற்பத்தி அளவும், சந்தை விரிவாக்கமும் கணிசமான அளவு வளர்ச்சி கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், களஞ்சியப்படுத்தல் மற்றும் விநியோக நடவடிக்கைகளில் இன்னும் வலுவான தர கட்டுப்பாடுகளைப் பேண வேண்டியதன் அவசியம் தற்போது தெளிவாக உணரப்பட்டுள்ளது.” என்று கூறினார்.
“குளிரூட்டப்பட்ட இக்களஞ்சிய வசதி, எமது கையிருப்பு முகாமைத்துவம், விநியோகம் மற்றும் பொருளின் தரம் ஆகியவற்றை மிக துல்லியத்துடன் திட்டமிடவும், நிர்வகிக்கவும் எமக்கு வழிவகுத்துள்ளது. இதன் மூலம் வீணான இழப்புகளைத் தவிர்க்கவும், நிலையான பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியும் என்பது எமக்கு மகிழ்ச்சி தருகின்றது. எதிர்காலத்தை நோக்கிய எமது பயணத்தில் வாடிக்கையாளர்கள் மற்றும் பங்காளர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் உயர்ந்த தரத்திலான பொறிமுறைகளை பேணி பொறுப்புணர்வுடன் எமது வணிக நடவடிக்கைகளை விரிவுபடுத்த இவ்வாறான முதலீடுகள் இன்றியமையாதவையாகும்.” என பிரதம நிறைவேற்று அதிகாரி மேலும் கூறினார்.
சுமார் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த அதிநவீன கூடமானது, மறை இருபது செல்சியஸ் (–20°C) வெப்பநிலையைப் பேணுவதன் மூலம் களஞ்சியப்படுத்தல் மற்றும் உற்பத்திப் பொருட்களை கையாள்வதலில் மேலதிக பாதுகாப்பை வழங்குகின்றது. திறந்துவைக்கப்பட்ட இந்த குளிரூட்டி சங்கிலி (Cold chain) வசதி, உற்பத்திப் பொருட்களின் வீண்விரயத்தை குறைப்பதற்கும், கையிருப்பு சுழற்சியை (Stock rotation) மேம்படுத்தவும் உதவுவதுடன், அனைத்துச் சந்தைகளுக்கும் உற்பத்திகள் உரிய தரத்தில் சென்றமைவதையும் உத்தரவாதப்படுத்துகின்றது.
நவீன களஞ்சிய முகாமைத்துவ முறைமை மூலம் உற்பத்தி, சேமிப்பு, விநியோகம் என அனைத்தும் தரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் கையிருப்பின் அளவை துல்லியமாக கணிக்க முடிவதுடன், ‘முதலில் வருவது முதலில் வெளியேறும்’ (FIFO) எனும் கையிருப்பு முகாமைத்துவ முறைமையும் சரியாகப் பின்பற்றப்படுகிறது.
மேலும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள QR குறியீடு அடிப்படையிலான கண்காணிப்பு முறைமை, ஏற்றுமதி நடவடிக்கைகளுக்கும், உற்பத்தி விபரங்களைக் கோரும் உள்நாட்டு சந்தைப் பிரிவுகளுக்கும் உதவியாக அமைந்துள்ளது. இன்னும் இது உள்நாட்டு விநியோகச் சங்கிலியில் உற்பத்திப் பொருட்களை அடையாளம் காணுதல், கண்காணித்தல் மற்றும் கையாள்வதற்கும் துணை புரிகின்றது.
இந்த வசதி கைகளால் கையாளுதல் முறைமையை குறைத்து இயந்தரிமயமாக்கப்பட்ட ‘ரீச் டிரக்குகளை (reach trucks) அறிமுகப்படுத்தி பாதுகாப்பான செயல் திறன் மிக்க பணிச் சூழலை உருவாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குளிரூட்டப்பட்ட களஞ்சியத்தின் செயற்பாடுகள் தொழிலாளர்களுக்கு சாதகமான வகையில் அமைந்துள்ளன. இதன் காரணமாக உற்பத்தியின் அளவு அதிகரித்த போதிலும், பணியாளர்கள் பொருட்களை ஏற்றுதல், நகர்த்தல் பணிகளை எளிதாகவும், பாதுகாப்பாகவும் தொய்வின்றி செய்வதற்கு முடியும்.
பைரஹா நிறுவனம் தன் உட்கட்டமைப்பை நவீனமயமாக்குவதற்கும், பெறுமதியான வாடிக்கையாளர் சங்கிலி ஊடான நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்காகவும் மேற்கொண்டு வரும் முயற்சிகளின் ஒரு பகுதியாகவே இப்புதிய குளிரூட்டப்பட்ட களஞ்சியக் கூடம் அமையப்பெற்றுள்ளது. நிறுவனம் விநியோகத்தில் நீண்டகால நிலைத்தன்மை, திறன், தரம் என்பவற்றை உத்தரவாதப்படுத்துவதை கவனித்திற் கொண்டே தனது செயற்பாட்டு பரப்பையும், உற்பத்தி திறன்களையும் விரிவுபடுத்தி, அமைப்பு மாற்றங்களுக்கும் வசதிகளை மேம்படுத்தவும் முதலீடுகளை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




