Tecxa தனியார் நிறுவனம், டிஜிட்டல் பொருளாதார அமைச்சு, நிதி மற்றும் பொருளாதார திட்டமிடல் அமைச்சு, HNB வங்கி மற்றும் இலங்கை பிணைய நிதி சங்கம் (Sri Lanka Fintech Forum) ஆகியவற்றுடன் இணைந்து, 2025 Sri Lanka FinTech மாநாட்டை எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.
“Empowering Sri Lanka’s Digital Economy: Innovations Driving Financial Inclusion and Growth” என்ற கருப்பொருளின் கீழ் செப்டம்பர் 24 மற்றும் 25 ஆகிய திகதிகளில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது. 25க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து 2,000க்கும் அதிகமான பங்கேற்பாளர்கள் இதில் கலந்துக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த இரண்டு நாள் மாநாடு ஆறு முக்கிய தலைப்புகளை மையமாகக் கொண்டு நடைபெற உள்ளது. நிதித்துறையின் எதிர்காலம், சர்வதேச மற்றும் பிராந்திய போக்குகள், Blockchain, செயற்கை நுண்ணறிவு (AI) Crypto நாணயங்கள் போன்ற புத்தாக்க தொழில்நுட்பங்கள், நிதி கண்டுபிடிப்புகள் மற்றும் உள்ளடக்கம், சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறை நெறிமுறைகள், முதலீடுகள் மற்றும் ஆரம்ப நிறுவன வளர்ச்சி போன்ற முக்கியமான கலந்துரையாடல் இடம்பெறவுள்ளன. மேலும், இந்த தலைப்புகள் மாநாட்டின் ஐந்து வெவ்வேறு இடங்களில் நடைபெறும் பல்வேறு அமர்வுகளில் கலந்துரையாடப்படும். இம்மாநாட்டில் FinTech நிறுவனங்களின் நிறுவனர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள், வங்கித் துறையினர், தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்த மாநாடு குறித்து கருத்து தெரிவித்த டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன, “இலங்கை அதன் டிஜிட்டல் மாற்றப் பயணத்தில் ஒரு தீர்மானம் மிக்க தருணத்தில் உள்ளது. 2030க்குள் 15 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி நாங்கள் பணியாற்றும்போது, இலங்கை FinTech மாநாடு 2025 போன்ற மேடைகளை உருவாக்குவது முக்கியமானது. இது புத்தாக்கத்தை வெளிக்கொணர்வதற்கும், மூலோபாய உத்திகளை உருவாக்குவதற்கும், முதலீட்டை ஈர்ப்பதற்கும், முன்னேறிய ஒழுங்குமுறை கட்டமைப்புகளை வடிவமைப்பதற்கும் உதவுகிறது. இந்த மாநாடு அரசாங்கம், தொழில் துறை மற்றும் உலகளாவிய பங்காளர்களுக்கிடையே உரையாடலை ஊக்குவிக்கிறது. இது இன்றைய இடைவெளிகளை நிரப்பவும், நாளைய டிஜிட்டல் உட்கட்டமைப்பை நோக்கமும் துல்லியமும் கொண்டு கட்டமைக்கவும் நம்மை ஊக்குவிக்கிறது,” என தெரிவித்தார்.
இது குறித்து Fintech Forum of Sri Lanka-வின் தலைவர் சன்ன டி சில்வா கருத்து தெரிவிக்கையில், ‘நிதித் துறையின் எதிர்காலம் டிஜிட்டல்மயமாக்கல் ஆகும். இலங்கை அதைப் பின்பற்றுவதோடு மட்டுமல்லாமல் அதற்கு தலைமைத்துவமும் வழங்க வேண்டும். இந்த மாநாடானது மத்திய வங்கியின் டிஜிட்டல் நாணயம் (CBDC) பரிசோதனை மற்றும் நிதித் தரவுகளைப் பாதுகாப்பாகப் பகிர்வதற்கு அனுமதிக்கும் திறந்த வங்கி முறைமை போன்ற புதிய நிதித் தொழில்நுட்பங்களுக்கான தெளிவான மற்றும் உறுதியான சட்டங்கள் மற்றும் வழிகாட்டுதல்களை உருவாக்க உதவும் என நம்புகிறோம். 2030 ஆம் ஆண்டளவில் இலங்கையில் உள்ள அனைவருக்கும் நிதிச் சேவைகளை அணுகக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்ய சர்வதேச கூட்டாண்மைகளை உருவாக்கவும் இது உதவும். மேலும், இலங்கையை தெற்காசியாவின் முன்னணி டிஜிட்டல் நிதி மையமாக மாற்றுவதே இதன் நோக்கமாகும்’ என்று தெரிவித்தார்.
இந்த மாநாடு நடைபெறுகின்ற காலப்பகுதியில் 100 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேற்பட்ட நேரடி வெளிநாட்டு முதலீட்டைப் பெறுவதும், 2030 ஆம் ஆண்டளவில் ஆண்டுதோறும் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை நேரடி வெளிநாட்டு முதலீடுகளாகப் பெற்றுக்கொள்வதும் ஏற்பாட்டாளர்களின் நோக்கமாகும். மேலும், இந்த முதலீடுகள் 95% நிதி உள்ளடக்கத்தை அடைவதற்கும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3% பங்களிப்பை வழங்குவதற்கு நிதித் தொழில்நுட்பத் துறையை மேம்படுத்துவதற்கும், 2030 ஆம் ஆண்டளவில் 200க்கும் மேற்பட்ட உள்நாட்டு FinTech நிறுவனங்களுக்கு ஆதரவு வழங்கவும் வழிவகுக்கும்.
‘இந்த மாநாடு பற்றி கருத்து தெரிவித்த HNB இன் முகாமைத்துவப் பணிப்பாளர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி தமித் பல்லேத்த, ‘நிதிச் சேவைகளுக்கான அணுகலை மேம்படுத்துவதன் மூலமும், புத்தாக்கங்கள் மற்றும் முதலீடுகளுக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலமும் இலங்கையின் பொருளாதாரத்தை வளர்ப்பதற்கு FinTech அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது. இந்த முக்கியமான மாநாட்டிற்கு பங்களிப்புச் செய்வதிலும், வலுவான, மேலும் டிஜிட்டல் இலங்கையை உருவாக்க உதவுவதிலும் HNB பெருமை கொள்கிறது’ என கூறினார்.
மேலும், இந்த மாநாட்டுக்கு முன்னதாக, Sri Lanka FinTech மாநாட்டின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை அறிமுகப்படுத்தும் விசேட நிகழ்வு ICTA கேட்போர் கூடத்தில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.